search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை பகுதி"

    சென்னிமலை பகுதியில் குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குகள் தற்போது நகர பகுதியில் உள்ள வீடுகள், கடைகளிலும் புகுந்து தொந்தரவு செய்வது அதிகரித்து விட்டது.

    குரங்குகளுக்குள் ஏற்படும் சண்டை மக்களை பய முறுத்துகிறது. சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குள் அங்கு உணவு பற்றாக்குறையால் சென்னிமலை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டன. வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களை குரங்குகள் தூக்கிச் சென்று விடுகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையில் இப்படித்தான் குரங்குகள் தொந்தரவு செய்தன. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நடவடிக்கையில் குரங்குகள் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது. அன்று முதல் இதுவரை குரங்குளின் தொந்தரவு கொஞ்சம் குறைந்திருந்தது.

    தற்போது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. குரங்குகளுக்கு மலை பகுதியில் போதுமான உணவு இல்லாத காரணத்தால் மெதுவாக மலை அடிவாரப் பகுதிக்கு வந்து இரை தேடுகின்றன. தற்போது சென்னிமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழையா விருந்தாளிகளாக இந்த குரங்குகள் வந்து இருப்பவற்றை தூக்கிப் போவது வாடிக்கையாகி விட்டது.

    வீடுகளில் ஜன்னல் திறந்து இருந்தால் போதும் அந்த வீட்டில் எந்த பொருளும் மிஞ்சாது. குறைந்தது 10 முதல் 15 குரங்குகள் வரிசையாக இறங்கிவிடும். வீடுகளில் எந்த ஒரு உணவு பொருளையும் வெயிலில் காய வைத்தால் குரங்குகளுக்குதான் ஆகும் என்ற நிலை உள்ளது. சென்னிமலை டவுன் பகுதி மக்கள் குரங்கு கூட்டத்திற்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை வீதியில் பழம், பன் போன்றவற்றை எந்த பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வந்து தூக்கி செல்கின்றன என கடை வியாபாரிகள் வருத்தப்படுகின்றனர். இந்த குரங்கு கூட்டத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×